ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு வந்த ரயிலில் இரண்டாயிரம் கிலோ நாய் இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது.
ஜோத்பூரில் இருந்து சென்னை வரும் ஜோத்பூர் விரைவு ரயிலில் முறையாகப் பதப்படுத்தப்படாத ஆட்டிறைச்சி அனுப்பப்பட்டுள்ளதாக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்படி இன்று காலை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்த ஜோத்பூர் விரைவு ரயிலில் உணவுப் பதுகாப்பு அதிகாரிகளும், சென்னை மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகளும் சோதனை மேற்கொண்டனர்.
அந்த ரயிலின் சரக்குப் பெட்டியில் இருந்து இறக்கி வைக்கப்பட்டிருத சுமார் 20 பார்சல்களை அதிகாரிகள் சோதனையிட்ட போது அவற்றில் இறைச்சி இருந்தது தெரியவந்தது. அதனை ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி சுகாதாரப்பிரிவு கால்நடை மருத்துவர்கள் அந்த இறைச்சியின் தன்மை, எலும்புகளின் அமைப்பு ஆகியவற்றைக் கொண்டு அவை நாய் இறைச்சி என்பதை கண்டுபிடித்தனர். ஜோத்பூரில் தனியார் நிறுவனம் மூலம் நாய் இறைச்சி பார்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த பார்சல்களை பதிவு செய்தவர்கள் யார்? இவை சென்னையில் யாருக்காக கொண்டு வரப்பட்டன என்பன குறித்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னைக்கு ஏற்கனவே இதுபோன்று கொண்டுவரப்பட்ட முறையாகப் பதப்படுத்தப்படாத இறைச்சி குறித்த அதிகாரிகளின் விசாரணை அடிப்படையில் நாய் இறைச்சிகள் சென்னையில் நட்சத்திர ஓட்டல்களுக்கு விற்பனை செய்ய கொண்டுவரப்படுவதாகக் கூறப்படுகிறது.