சென்னையில் அண்ணாநகர், அடையாறு உள்ளிட்ட இடங்களில் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி என்ற நிறுவனத்தை நடத்திவந்த அதன் நிறுவனர் சங்கரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மயிலாப்பூர் கிருஷ்ணசாமி அவென்யூவில் மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்த சங்கரன், அண்ணாநகர், அடையாறு, சேலம், மதுரை, பெங்களூரு, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி என்ற பெயரில் பயிற்சி வகுப்புகளை நடத்தி வந்தார். இவரது அகாடமியில் படித்த பலர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கு தேர்வாகியுள்ளனர். மேலும், டி.என்.பி.எஸ்.சி, யு.பி.எஸ்.சி. மற்றும் வங்கிப் பணிகளுக்கும் இவர் பயிற்சிகளை நடத்தி வந்தார். இந்நிலையில், நேற்று இவருக்கும், மனைவி வைஷ்ணவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
காலையில் அவரது அறையை திறந்து பார்த்தபோது, மின்விசிறியில் தூக்கிட்டு சங்கரன் தற்கொலை செய்து கொண்டதை கண்ட உறவினர்கள், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சங்கரன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறிய நிலையில், மயிலாப்பூர் போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.