கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை…

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, தேவாலயங்களில் நள்ளிரவுப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. திருப்பலி நிகழ்ச்சியில் திரளானோர் குடும்பத்துடன் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இயேசுபிரான் அவதரித்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகை உலகெங்கும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை சாந்தோம் பேராலயம் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

சென்னை பெசன்ட்நகர் புனித வேளாங்கண்ணி ஆலயத்தில் நள்ளிரவில் விளக்குகள் அணைக்கப்பட்டு, வாணவேடிக்கை முழங்க இயேசுவின் பிறப்பை மக்கள் வரவேற்றனர். ஒவ்வொருவரும் அன்பைப் பரிமாறி மகிழ்வுடன் இருக்க தேவாலய தந்தை பிரான்சிஸ் சேவியர் வாழ்த்து தெரிவித்தார்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சி.எஸ்.சி. வெஸ்லி தேவாலயத்தில், அதிகாலை 4.30 மணி மற்றும் 8.30 மணி ஆகிய நேரங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டபின், குடிலில் குழந்தை ஏசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர். வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

இதேபோன்று, தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம், சேலம் குழந்தை ஏசு தேவாலயம், கோவை மைக்கேல் ஆதித்தூதர் பேராலயம், குமரி மாவட்டம் கோட்டார் சவேரியார் பேராலயம் ஆகிய இடங்களிலும் கிறிஸ்துமஸ் பிரார்த்தனைகள் நடைபெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *