ஜம்மு-காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 2 பேரை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள முனிவாட் ((Muniward)) கிராமத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராணுவம், எல்லைப்பாதுகாப்புப் படையினருடன் சென்று வீடு வீடாக போலீசார் சோதனை நடத்தினர்.
நேற்று இரவு தொடங்கிய சோதனை இன்று காலை வரை நீடித்த நிலையில், ஒரு வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து, ராணுவத்தினர் நடத்திய பதிலடி தாக்குதலால், இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக, ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், சில தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தால், ராணுவத்தினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.