கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னை, வாழை உள்ளிட்ட கன்றுகளை இலவசமாக வழங்கி, புனர்வாழ்வு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கஜா புயலின் காரணமாக நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பொதுமக்களின் சொத்துகள் சேதமடைந்ததோடு, பல ஆண்டுகளாக வளர்த்து வந்த தென்னை மரங்களும் லட்சக்கணக்கில் வேருடன் சாய்ந்தன. அதேபோல், மா, பலா, முந்திரி, தேக்கு உள்ளிட்ட நீண்டகால மரங்களும் சாய்ந்ததோடு, பல நூறு ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல், வாழை, கரும்பு ஆகியவையும் நாசமாயின.
வீடுகள் சேதமானதோடு, வாழ்வாதாரமாக விளங்கிய பயிர்களும், மரங்களும் சேதமானதால், புயலில் சாய்ந்த தென்னை மரம் ஒன்றுக்கு ஆயிரத்து 100 ரூபாய் வீதம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதேபோல், மற்ற பயிர்களுக்கும் இழப்பீடு அறிவிக்கப்பட்ட நிலையில், விவசாயிகளுக்கு புனர்வாழ்வு திட்டம் ஒன்றை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்மூலம், புயலில் சாய்ந்த தென்னை, வாழை, மா, பலா, முந்திரி ஆகிய மரங்களுக்கு பதிலாக, புதிய மரக்கன்றுகளை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ள தமிழக அரசு, ஓராண்டுக்கான உரத்தையும் விலையில்லாமல் கொடுக்க திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக 5 லட்சம் தென்னங்கன்றுகளை கர்நாடகாவில் இருந்து வாங்க முடிவு செய்துள்ள தமிழக அரசு, டெல்டா மாவட்டங்களில் தற்போது நடந்து வரும் இழப்பு குறித்த கணக்கெடுப்பு பணி நிறைவு பெற்றதும், புனர்வாழ்வு திட்டத்தை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.