கடன் முறைகேடு வழக்கில் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சிஇஓ சாந்தா கோச்சார், வீடியோகான் மேலாண் இயக்குநர் வேணுகோபால் தூத் ஆகியோரிடம் அமலாக்கத்துறை இன்று விசாரணை நடத்த உள்ளது.
2012ஆம் ஆண்டில் வீடியோகான் குழுமத்திற்கு, ஐசிஐசிஐ வங்கி 3 ஆயிரத்து 250 கோடி ரூபாய் கடன் வழங்கியது. விதிமுறைகளுக்கு மாறாக இந்த கடன் வழங்கப்பட்டதாகவும் அதற்கு கைமாறாக வீடியோகான் மேலாண் இயக்குநர் வேணுகோபால் தூத், சாந்தா கோச்சாரின் கணவர் நடத்தும் நியூபவர் நிறுவனத்தில் மறைமுகமாக 64 கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
கடன் வழங்கிய விவகாரத்தில் வங்கி நடத்தை விதிமுறைகளை மீறப்பட்டிருப்பதாக நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா குழு குற்றம்சாட்டியதை அடுத்து, ஐசிஐசிஐ வங்கியின் மேலாண் இயக்குநர் மற்றும் சிஇஓ பொறுப்பில் இருந்து சாந்தா கோச்சார் நீக்கப்பட்டார்.
மேலும் வீடியோகான் கடன்முறைகேடு வழக்கில், சாந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் குழும மேலாண் இயக்குநர் வேணுகோபால் தூத் உள்ளிட்டோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தன. வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க இவர்களுக்கு எதிராக சிபிஐ லுக் அவுட் நோட்டீசும் பிறப்பித்துள்ளது.
நேற்று சாந்தா கோச்சார் மற்றும் வேணுகோபால் தூத் ஆகியோரின் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. இதன் அடிப்படையில் இருவரையும் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.