அமைப்புசாரா ஏழை தொழிலாளர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அமைப்புசாரா ஏழை தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் திட்டத்திற்குத் தடை கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்தே 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளதாகவும், அரசின் கொள்கை முடிவுகளில் சட்டம் அல்லது விதி மீறப்பட்டால் அல்லது உள் நோக்கம் இருந்தால் அதில் நீதிமன்றம் தலையிடலாம் என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
2011-12ஆம் ஆண்டில் 11 லட்சம் குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பதாகக் கூறப்பட்டதாகவும், தற்போது 60 லட்சம் குடும்பங்கள் இருப்பதாகக் கூறுவதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் வறுமை குறைந்து வருவது போல காட்டும் நிலையில், தமிழகத்தில் 30 சதவீத ஏழைகள் இருக்கிறார்கள் என்பதை அரசு ஒப்புக்கொள்கிறதா? எனவும் மனுதாரர் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. தமிழகத்தில் ஏழைகள் கணக்கெடுப்பு 2006 முதல் நடத்தப்பட்டு அட்டை வழங்கப்பட்டு, பதிவேடும் பராமரிக்கப்படுவதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
பல கட்டங்களில் நடத்திய இந்த கணக்கெடுப்பில் கிராமப்புற பகுதிகளில் 32 லட்சத்து 13 ஆயிரம் குடும்பங்களும், நகர்ப்புற பகுதிகளில் 23 லட்சத்து 54 ஆயிரம் குடும்பங்களும் என 55 லட்சத்து 68 ஆயிரம் ஏழை குடும்பங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் அரசு தலைமை வழக்கறிஞர் கூறினார்.
ஆதார் அட்டை இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களை சேகரிக்க 55 ஆயிரம் பேர் கடந்த இரண்டு நாட்களாக கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஏழை குடும்பங்களுக்கு நிதி வழங்குவது அரசின் கொள்கை முடிவு என்றும், போலிகள் பயனடைவதை தடுக்க மின்னணு முறையில் பணம் வங்கிகளில் செலுத்தப்படுவதாகவும் அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
மனுதரார் கூறுகின்ற 2011-12 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் தற்போது மாறியிருக்கும் என்றும், 2018 -19ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களை குறிப்பிட்டு வழக்கு தொடரவில்லை என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
வறுமையை ஒழிக்க, மாவட்டந்தோறும் 24 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பள்ளி, கல்லூரிகள் கட்டவும், மருத்துவமனை கட்டவும் சொல்லலாம் என்று கூறிய நீதிபதிகள், ஆனால் அவை அரசு எடுக்க வேண்டிய கொள்கை முடிவுகள் என தெரிவித்தார்.
அமைப்புசாரா ஏழை தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க மறுத்துவிட்ட நீதிபதிகள், தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.