டெல்லியில் கொள்ளையர்களிடம் இருந்து, நான்கரை கோடி ரூபாய் வங்கிப் பணத்தை காவலர் ஒருவர் உயிரைக்கொடுத்து காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி அருகே நொய்டாவில் உள்ள வங்கியில் இருந்து ஜனக்புரி பகுதியில் உள்ள மற்றொரு வங்கிக்கு, சுமார் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் பணத்தை வேனில் கொண்டு சென்றனர். அந்த வேனை ஒருவர் இயக்க, பாதுகாவலர் ஒருவரும், கணக்காளர் ஒருவரும் இருந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலையை வேன் அடைந்தபோது, அதை 2 கார்களில் வந்தவர்கள் வழிமறித்துள்ளனர்.
அவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுத்த நிலையில், வேனில் சென்ற பாதுகாவலர் தம்மிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளார். அதைத் தொடர்ந்து கொள்ளையர்களும் துப்பாக்கியால் சுட்டதில், பாதுகாவலர் பிஷாம்பர் சிங், படுகாயமடைந்தார். இருப்பினும், அவர் தொடர்ந்து சுட்டதால்,கொள்ளையடிக்கும் திட்டத்தை கைவிட்டு, மர்ம நபர்கள் தப்பியோடினர். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாதுகாவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்