பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக, இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ளார்.
சென்னை விமான நிலையம் வந்தடைந்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை, தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவை தலைவர் தனபால், அமைச்சர் ஜெயக்குமார், உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அப்போது, தமிழ்நாடு டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் வரவேற்றனர்.
இன்று மாலை தியாகராயர் நகரில் உள்ள இந்தி பிரச்சார சபாவில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்கும் குடியரசு தலைவர், அங்கு நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலையை திறந்து வைக்கிறார்.
இரவு ஆளுநர் மாளிகையில் தங்கும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், நாளை காலை 8.15 மணியளவில், ஹெலிகாப்டர் மூலம் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு சென்று, சுவர்ண பாரதி அறக்கட்டளையின் ஆண்டு விழாவில் பங்கேற்கிறார்.