இந்தியாவின் முப்படைத் தளபதிகளுக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு

இந்தியாவின் முப்படைத் தளபதிகளுக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம், ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் நடத்திய தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றநிலை உருவானது.

இந்த பின்னணியில், எல்லையிலும், உள்நாட்டிலும் பல்வேறு நிலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல, படைகளின் தளபதிகளுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் அபாயம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து விமானப் படை தளபதி பி.எஸ்.தனோவா, கடற்படை தளபதி சுனில் லன்பா ஆகியோருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்குவது என மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விமானப் படை மற்றும் கடற்படை தளபதிகளுக்கு, சம்மந்தப்பட்ட படைகளின் கமாண்டோக்கள் நெருங்கிய உள்பாதுகாப்பு வழங்குவது தொடரும் என்றும், சுற்றுப்பாதுகாப்பை மட்டும் மத்திய மற்றும் மாநில பாதுகாப்பு முகமைகள் வழங்கும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ராணுவ தளபதி பிபின் ராவத்துக்கு ஏற்கெனவே இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *