டிட்லி புயல் மணிக்கு 150கிலோமீட்டர் வேகத்தில் ஒடிசா மாநிலம் கோபால்பூர் அருகே கரையைக் கடந்தது. புயலால் ஏராளமான மரங்களும் மின்கம்பங்களும் சாய்ந்துள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிரிழப்பு நேராமல் தவிர்க்கப்பட்டது.
வங்கக் கடலில் உருவாகிய டிட்லி புயல் வலுவடைந்து இன்று காலை ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம், ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டம் இடையே கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 150கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதால் ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்தன. மின்கம்பங்களும் சாய்ந்தன. குடிசை வீடுகளில் சிமென்ட், தகரக் கூரைகள் காற்றில் பறந்தன.
அதிகாலை 5.30 மணிளவில், வடக்கு ஆந்திரா- தெற்கு ஒடிசா இடையே கோபால்பூர் பகுதியில் டிட்லி புயல் கரையை கடந்த போது கடல் அலைகள் பெரும் கொந்தளிப்புடன் காணப்பட்டன.
புயலின் தாக்கத்தால் ஒடிசாவில் கஞ்சம், கஜபதி, குர்தா, பூரி, ஜகத்சிங்பூர், கேந்திரப்பாரா, பத்ராக், பாலாசூர் மாவட்டங்களிலும், ஆந்திரத்தின் விசாகப்பட்டினம், கஞ்சம் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. ஆந்திர மாநிலத்தின் கஞ்சம் மாவட்டத்தில் புயலின் போது மணிக்கு 56கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.
புயல் கரையைக் கடக்கும் நேரத்தை முன்கூட்டி அறிவித்துக் கடலோரப் பகுதிகளில் இருந்த 3இலட்சம் பேரைப் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தியதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. எனினும் மரங்கள், மின்கம்பங்கள், விளக்குக் கம்பங்கள், கூரைகள் சேதமடைந்ததால் பொருளிழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே ஒடிசாவின் கடலோர மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத் தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. விசியநகரம் – பத்ராக் இடையே ரயில்போக்குவரத்து நேற்றிரவில் இருந்தே நிறுத்தப்பட்டுள்ளது.