விழுப்புரம் அருகே 2 குழந்தைகளை அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கடித்து கொன்றுவிட்டு தலைமறைவான தாயை, போலீசார் கைது செய்துள்ளனர். கட்டமுத்து புதுப்பாளையத்தைச் சேர்ந்த சிலம்பரசன் – ஜெயசித்ரா தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் இருந்தனர்.
சில மாதங்களுக்கு முன் 7 மாத குழந்தை லக்ஷன், தண்ணீர் அண்டாவில் விழுந்து உயிரிழந்தது. பின்னர் அந்த தம்பதி பனங்குப்பத்துக்கு குடிபெயர்ந்துள்ளது. இந்நிலையில், அவர்களது 4 வயது மகன் மிதுனின் உடல் வியாழனன்று வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் மீட்கப்பட்ட நிலையில், ஜெயசித்ரா மாயமானார்.
2 குழந்தைகளையும் ஜெயசித்ராவே கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் வளவனூர் போலீசார் அவரை தேடி வந்தனர். நேற்றிரவு அவர்கள் ஜெயசித்ராவை மேல்மருவத்தூரில் கைது செய்து விசாரித்தனர். குழந்தைகள் இருவரையும் தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்றதாக ஒப்புக் கொண்ட அவர், கொன்றதற்கான காரணம் தனக்கே தெரியவில்லை என கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.