தஞ்சை பெரியகோவிலில் நான்காவது முறையாக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தொல்லியல் துறையினருடன் இணைந்து சிலைகளின் தொன்மை குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான நடராஜர் சிலை உள்பட 10 சிலைகள் களவாடப்பட்டு போலி சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தொல்லியல் துறையினருடன் இணைந்து 3 கட்டங்களாக ஆய்வு நடத்தினர்.
இந்நிலையில் ஆலயத்தில் இன்று நான்காவது முறையாக ஆய்வு நடைபெற்று வருகிறது. தஞ்சை பெரியகோவில் வடக்கு பிரகாரத்தில் உள்ள மகா மண்டபத்தில் ஐம்பொன்னாலான பெருவுடையார், நடராஜர் சிலை என 41 சிலைகளின் தொன்மை குறித்து சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
பத்து மேஜைகளில் 20 அதிகாரிகள் இந்த ஆய்வு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். சிலைகளில் தற்கால தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளதால் சிலைகள் மாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு நடைபெற்று வருவதாகவும், சிலைகளின் உயரம், எடை, அகலம், சிலைகளின் வடிவமைப்பு ஆகியவை கணக்கெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.