டெல்லியில் இருந்து சென்னை செண்ட்ரல் வந்த GT எக்ஸ்பிரஸ் ரயிலின் AC பெட்டியில் இருந்து 6 தோட்டாக்கள் அடங்கிய கைத்துப்பாக்கியில் செருகி பயன்படுத்தும் மேஃகஸைன் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று முன் தினம் டெல்லியில் புறப்பட்ட அந்த ரயில் இன்று காலை 6.20 மணிக்கு சென்னை செண்ட்ரல் நிலையம் வந்துள்ளது. பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர், முதல் வகுப்பு ஏ.சி. பெட்டிகளுக்கான உதவியாளராக பணிபுரியும் அருண்குமார் என்பவர், HA 1 பெட்டியை சோதனை செய்துள்ளார். அப்போது ஜி என்ற கேபினில் 6 தோட்டாக்களுடன் கூடிய கைத்துப்பாக்கியில் செருகி பயன்படுத்தக் கூடிய மேஃகஸைன் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக செண்ட்ரல் ரயில்வே போலீஸ் அலுவலகம் சென்ற அருண் குமார், நடந்தவற்றை விளக்கமாக கூறி துப்பாக்கி மேஃகஸைனை ஒப்படைத்தார். விரைவாக விசாரணையில் இறங்கிய ரயில்வே போலீசார், இதை கொண்டு வந்தது யார் என்பதை அறிவதற்காக அந்தப் பெட்டியில் பயணம் செய்தோரின் பட்டியலை ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பிட்ட ஜி கேபினில் 4 பேர் பயணிக்க முடியும் என்பதால் அதில் பயணித்த ஒருவர் தான் இதைக் கொண்டு வந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
இந்த துப்பாக்கி உரிய உரிமத்துடன் கொண்டு வரப்படதா? எதற்காக கொண்டு வரப்பட்டது? என்ற கோணத்தில் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. ஏற்கெனவே வட மாநிலங்களில் இருந்து கள்ளத் துப்பாக்கிக் கடத்தலும், இதுதொடர்பான கைதுகளும் அதிகரித்த சூழலில் தற்போது வட மாநிலங்களைக் கடந்து வந்த ரயிலில் துப்பாக்கி மேகஸைன் சிக்கி இருப்பது பிரச்சனையின் தீவிரத்தை உணர்த்துவதுடன், ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அபாயமாக உருவெடுத்துள்ளது. பயணிகளை பரிசோதிக்கும் முறைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற அவசியத்தையும் உணர்த்தி உள்ளது.