டெங்கு, பன்றிக் காய்ச்சல் தொடர்பாக, மருத்துவ முகாம்களை நடத்தி மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு திமுக மருத்துவர் அணிக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் ஏழு வயது இரட்டைக் குழந்தைகளும், ஒரே வாரத்தில் தமிழகம் முழுவதும் 13 பேரும் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். டெங்கு காய்ச்சலை தடுக்க போதிய நடவடிக்கைகள் இதுவரை அரசின் சார்பில் எடுக்கப்படவில்லை என்றும், மருத்துவமனைகளும் உரிய முறையில் தயார் நிலையில் இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
டெங்கு, பன்றி, எலிக் காய்ச்சல் அனைத்தையும் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தரமான அவசரச் சிகிச்சைகள் அளிக்கவும் உடனடி நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். திமுக மருத்துவர் அணி சார்பில் ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் நடத்தி, மருந்து மாத்திரைகள் வழங்குவதோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விளக்கி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.