ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது விசைப்படகு கவிழ்ந்ததால், நீரில் மூழ்கி மாயமான புதுச்சேரி காரைக்காலை சேர்ந்த 2 மீனவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.
கோட்டுச்சேரிமேடு பகுதியை சேர்ந்த 13 மீனவர்கள், நேற்றிரவு நாகை மாவட்டம் விழுந்தமாவடிக்கு கிழக்கே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது கடல் சீற்றத்தால் மீனவர்களின் விசைப்படகு கவிழ்ந்துள்ளது.
இதனால் கடலில் தத்தளித்த மீனவர்களில் 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். சந்தோஷ், நீலவர்ணன் ஆகிய இரு மீனவர்கள் மாயமானதாக கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணியில் இந்திய கடலோர காவல் படை மற்றும் காரைக்கால் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் துறைமுகத்தில் காத்திருக்கும் மாயமான மீனவர்களின் உறவினர்களை புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.