2021 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – ஏஞ்சலா மெர்கல்

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார். ஜெர்மனியின் முதல் பெண் பிரதமராக 2005-ஆம் ஆண்டு பொறுப்பேற்ற ஏஞ்சலா மெர்கல், 13 ஆண்டுகளாக அப்பொறுப்பில் நீடிக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது குறைவான இடங்கள் பெற்றதால், சரிவர ஒத்துழைப்பு இல்லாத கட்சியினருடன் கூட்டணி அமைக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டார்.

சமீபத்தில் சில மாநிலங்களில் நடந்த தேர்தலிலும் அவர் தலைமை வகிக்கும் கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன் கட்சி தோல்வியடைந்தது. மெர்கலின் பிரதமர் பதவிக்காலம் வரும் 2021-ஆம் ஆண்டுடன் முடியும் நிலையில், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும், 4-வது பதவிக்காலமே இறுதியானது எனவும் செய்தியாளர்களைச் சந்தித்து அறிவித்துள்ளார்.

கடந்த 2000-மாவது ஆண்டு முதல் 18 ஆண்டுகளாக கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன் கட்சியின் தலைவராகப் பதவி வகித்து வந்த அவர், கட்சிப் பதவிக்கான தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார். வரும் டிசம்பரில் கட்சித் தலைவருக்கான தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *