துருக்கியில் உள்ள சவூதி தூதரகத்தில் பத்திரிக்கையாளர் ஜமால் கஸோக்கி கொல்லப்பட்ட போது பதிவான ஆடியோவின் மொழிப்பெயர்ப்பு அறிக்கையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி சுவாசிக்க முடியவில்லை எனக் கூறியதே கஸோக்கி பேசிய கடைசி வார்த்தையாகப் பதிவாகியுள்ளது. படுகொலை அரங்கேறிய நேரத்தில் ஏராளமான முறை சவூதி தூதரகத்தில் இருந்தவர்களின் செல்போன்களில் அழைப்புக்கள் வருவதும், அங்கு நடந்த படுபாதக செயல்களை அழைத்தவரிடம் விவரிப்பது போன்றும் ஆடியோவில் பதிவாகியுள்ளது.
கஸோக்கியின் உடலை மரம் அறுக்கும் மின்சார இயந்திரத்தைக் கொண்டு அறுக்கும் சத்தமும், அந்த சத்தம் வெளியில் கேட்காமலிருக்க பின்னணியில் இசையின் சத்தத்தை கூட்டுவதும் இடம்பெற்றுள்ளன.
சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்தான் வாசிங்டன் போஸ்ட் பத்திரிக்கையாளர் கஸோக்கியைக் கொல்ல உத்தரவிட்டதாகக் சிஐஏ தெரிவிக்கும் நிலையில், அவர் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு ஏதும் சுமத்தாமலிருப்பது குறிப்பிடத்தக்கது.