செய்தியாளர் ஜமால் கசோக்கி கொலையில் தொடர்புடைய 5 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்படும் என்றும் சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான எஸ்.பி.ஏ. விடுத்துள்ள அறிக்கையில், கடந்த அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி துருக்கியில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்திற்கு சென்ற கசோக்கி கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதாகவும், அவரது உடலை துண்டாக்கி தூதரகத்திற்கு வெளியே இருந்த மற்றொருவரிடம் கொலைக் கும்பல் கொடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
கசோக்கியை கொல்ல உளவுத்துறை துணைத் தலைவர் அகமது அல் அசிரி உத்தரவிட்டதாகவும், 21 பேருக்கு தொடர்பு உள்ளதாகவும், கொலையில் ஈடுபட்ட 5 பேருக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கசோக்கி கொலையை அடுத்து சர்வதேச நாடுகள் கொடுத்த நெருக்கடியால் இப்போது கொலையை ஒப்புக் கொண்டுள்ள சவுதி அரேபிய அரசு, கொலையாளிகளை அடையாளமும் காட்டி உள்ளது. ஆனால் கொலையில் பட்டத்து இளவரசர் முகமதுவுக்கு தொடர்பில்லை என்றும் அந்நாட்டு அரசு மறுத்துள்ளது.