அமெரிக்க செனட் சபையில் அதிபர் டிரம்பின் குடியரசுக் கட்சி பெரும்பான்மையை தக்கவைத்துள்ள நிலையில், பிரதிநிதிகள் சபைத் தேர்தலில், யாருக்கு பெரும்பான்மை என்பதில் கடும் இழுபறி நீடிக்கிறது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் உள்ள 435 உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. அதேபோன்று 100 உறுப்பினர்களைக் கொண்ட செனட் சபையில் 35 பேரின் பதவிக்காலம் முடிவடைகிறது. எனவே, இப்பதவிகளை நிரப்புவதற்காகவும், 36 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களுக்கான ஆளுநர்களை தேர்வு செய்வதற்காகவும் நேற்று இடைக்காலத் தேர்தல் நடத்தப்பட்டது. 50 மாகாணங்களிலும் நடைபெற்ற இந்த வாக்குப்பதிவில் பெருவாரியான மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. செனட் சபைக்கு நடைபெற்ற தேர்தலில், பெருவாரியான இடங்களை கைப்பற்றியுள்ள அதிபர் டிரம்பின் குடியரசுக் கட்சி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. அதேநேரத்தில் பிரதிநிதிகள் சபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இதுவரை 313 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், அதிபர் டிரம்பின் குடியரசுக் கட்சி 157 இடங்களிலும், ஜனநாயக கட்சி 156 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. இதனால், யார் பிரதிநிதிகள் சபையை கைப்பற்றுவார்கள் என இழுபறி தொடர்ந்து நீடிக்கிறது.