நாடாளுமன்றத்தில் கடும் அமளிக்கு இடையே நுகர்வோர் பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தொடரின் 7-ஆம் நாளான இன்றும் மக்களவை அமளியுடனேயே தொடங்கிய போதும் வாடகைத்தாய் முறை தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் மேகதாது விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை அருகே சென்று முழக்கங்களை எழுப்பினர்.
காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்களும் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பிய நிலையில் சபநாயகர் சுமித்ரா மகாஜன் அமளிக்கிடையே கேள்வி நேரத்தை நடத்த முயற்சித்தார். ஆனால் அது முடியாததால் அவையை அவர் பிற்பகல் 12 மணி வரையும் பின்னர் 2 மணி வரையும் ஒத்திவைத்தார்.
இந்நிலையில் மேகதாது விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவர அ.தி.மு.க. உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார். பிற்பகல் 2 மணிக்கு அவை தொடங்கிய போது அமளிக்கிடையே நுகர்வோர் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.
மாநிலங்களவையிலும் ரஃபேல், காவிரி, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே மேகதாது விவகாரத்தில் நாடாளுமன்ற வளாகத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.