பிரதமர் நரேந்திர மோடி ஊழல்வாதி எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
ரஃபேல் ஒப்பந்தத்தில் டசால்ட் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமாக ரிலையன்சை தவிர வேறு எந்த ஒரு நிறுவனத்தையும் சேர்த்துக் கொள்ள இந்தியா தங்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்று பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே கூறியிருந்தார். இதே போல், ரிலையன்ஸ் நிறுவனத்தை கட்டாயமாக கூட்டு நிறுவனமாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று இந்தியா ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்ததாக டசால்ட் மூத்த அதிகாரி ஒருவர் கூறியிதாக பிரான்ஸ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து டெல்லியில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டசால்ட் நிறுவனத்தின் மூத்த அதிகாரியும் ரிலையன்சை கூட்டு நிறுவனமாக சேர்க்கும் கட்டாயம் உருவாக்கப்பட்டதாக கூறியிருப்பதன் மூலம் ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதையே காட்டுவதாகத் தெரிவித்தார்.
எனவே இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒரு ஊழல்வாதி என்று நாட்டின் இளைஞர்களுக்கு தான் தயக்கம் இன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் ராகுல்காந்தி கூறினார். பிரான்சில் டசால்ட் நிறுவனத்தின் தொழிற்சாலைக்குப் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது அவசரமாகச் செல்ல வேண்டிய காரணம் என்ன என்றும் ராகுல்காந்தி வினா எழுப்பினார். இந்திய அரசு என்ன சொல்ல விரும்புகிறதோ அதையே, பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் விமானங்களை வழங்க உடன்பாடு செய்துள்ள டசால்ட் நிறுவனம் சொல்லும் என்றும் ராகுல்காந்தி தெரிவித்தார்.
இதனிடையே கூட்டு நிறுவனத்தை சேர்த்துக் கொள்வதில் இந்தியா தங்களுக்கு முழு சுதந்திரம் அளித்ததாக டசால்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. பல்வேறு நிறுவனங்களை பரிசீலனை செய்து இறுதியில் தான் ரிலையன்சை கூட்டாளியாக சேர்த்துக் கொண்டதாகவும் டசால்ட் தெரிவித்துள்ளது. ரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்சை சேர்த்துக் கொண்டது தங்களின் சுதந்திரமான முடிவு என்றும் அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.