நரேந்திர மோடியுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே சந்திப்பு, இந்திய நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆலோசனை.

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசிய இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, அந்நாட்டில் இந்திய நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவுக்கு 3 நாள் பயணமாக, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, கடந்த வியாழக்கிழமை டெல்லி வந்தார். வெளியுறவுத்துறை அமைச்சர், அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்திய அவர், இன்று டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். அப்போது, இருதரப்பு உறவுகள் மற்றும் இந்தியா சார்பில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுத் திட்டங்கள், யாழ்ப்பாணத்தில் ஈழத்தமிழர்களுக்கு வீடு கட்டுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார், பிரதமர் மோடி மற்றும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே சந்தித்த புகைப்படத்தையும் பதிவேற்றியுள்ளார். இந்த சந்திப்பின்போது, இலங்கைக்கு என இந்தியர்களின் இதயத்தில் தனி இடம் இருப்பதாக பிரதமர் மோடி கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *