கால்நடைத்தீவன ஊழல் தொடர்பான 4 வது வழக்கில் லாலு பிரசாத்துக்கு 7 ஆண்டுகள் சிறை

கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 4வது வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத்க்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

தியோகர் கருவூலத்தில் இருந்து ரூ.89.27 லட்சம் கையாடல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் லாலுவுக்கு ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து லாலு கடந்த டிசம்பர் 23-ம் தேதி முதல் ராஞ்சி மத்திய சிறையில் இருந்து வருகிறார்.

கால்நடை தீவன ஊழல் தொடர்பாக மேலும் 2 வழக்குகளில் லாலு தண்டிக்கப்பட்டுள்ளார். சைபாசா கருவூலத்தில் நடந்த ரூ.37.7 கோடி கையாடல் வழக்கில் லாலுக்கு கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் இவ்வழக்கில் லாலு ஜாமீன் பெற்றுள்ளார். சைபாசா கருவூலத்தில் இருந்து ரூ.37.62 கோடி கையாடல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கில் லாலுவுக்கு கடந்த ஜனவரி 24-ம் தேதி 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், 4-வது மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு குற்றவாளி என ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் சில நாட்களுக்கு முன் தீர்ப்பளித்தது. தும்கா கருவூலத்தில் மோசடி செய்து பணம் கையாடல் செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. மற்றொரு முன்னாள் முதலமைச்சர் ஜெகநாத் மிஸ்ரா குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றம் சாட்டப்பட்ட 31 பேரில் 19 பேரின் குற்றத்தை நீதிமன்றம் உறுதி செய்தது.

இவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் லஞ்ச ஒழிப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் தலா 7 ஆண்டுகள் வீதம் லாலு பிரசாத்துக்கு தண்டனை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்தது. அதாவது, அடுத்தடுத்து 7 ஆண்டுகள் என மொத்தம் 14 ஆண்டுகள் அவர் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *