இன்று மற்றும் 7, 8 தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

நவம்பர் 4  மற்றும் 7, 8 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில்  கடந்த 1ம் தேதி தொடங்கியது. அதன் பிறகு தமிழகத்தின் இதர பகுதிகளில் பருவமழை தொடங்கியது. அன்றைய தினம் முதல் தென்மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை திடீரென எழும்பூர், புரசைவாக்கம், சூளை, பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

தொடர்ந்து மாலை வரை வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இதனால், குளிர்ச்சியான சீதோஷண நிலை உருவானது. இந்த நிலையில் இன்று தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு  மையம் எச்சரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் 29 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. சாத்தான்குளத்தில் 22 செ.மீ., பாபநாசம் 16 செ.மீ, திருச்செந்தூர் 11 செ.மீ., தலா மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மழை தொடர்பாக இந்திய வானிலை மையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதாலும், தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் தெற்கு வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியாலும் தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவின் பெரும்பாலான இடங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளிலும் தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *