இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமானால் பாகிஸ்தான் மதச்சார்பற்று செயல்பட வேண்டும் என ராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருந்தார். இந்தியாவுடன் அமைதியான உறவை மேற்கொள்ளவே பாகிஸ்தான் விரும்புவதாகவும், இம்ரான்கான் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத், பேச்சுவார்த்தைக்காக இந்தியா ஒரு அடி எடுத்து வைத்தால், தாங்கள் இரண்டு அடி எடுத்து வைப்பதாக பாகிஸ்தான் கூறுகிறது என சுட்டிக்காட்டினார்.
ஆனால், அவர்கள் எடுத்து வைக்கும் முதல் அடி நேர்மறையானதாக இருக்க வேண்டும் எனவும், அதன் தாக்கம் எப்படியிருக்கிறது எனவும் தாங்கள் உணர வேண்டும் எனவும் குறிப்பிட்டார். அதுவரை, தீவிரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒருங்கே நடைபெறாது என்ற கொள்கையில் இந்திய தேசம் தெளிவாக இருப்பதாகக் கூறியுள்ளார்.