டெல்லியில் அமைச்சக அலுவலகங்கள் இருக்கும் முக்கிய கட்டிடம் ஒன்றில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
டெல்லி சி.ஜி.ஓ. வளாகத்தில் உள்ள தீன் தயாள் அந்தியோதயா பவன் என்ற 11 மாடிக்கட்டிடத்தில் சமூக நீதி அதிகாரமளித்தல் அமைச்சகம், மாற்றுத் திறனாளிகள் நல அமைச்சகம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாறுபாட்டு அமைச்சகங்களின் அலுவலகங்கள், தேசிய பேரிடர் மீட்புப் படை அலுவலகம் உட்பட பல்வேறு முக்கிய அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. மேலும் பல குடியிருப்புகளும் உள்ளன. இந்தக் கட்டிடத்தின் 5-வது மாடியில் இன்று காலை 8 மணிக்கு பற்றிய தீ வேகமாகப் பரவியது.
தகவல் அறிந்து 24 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புப் படையினர் நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயமடைந்த நிலையில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.