இதயநோய், புற்றுநோய் போன்ற பாதிப்புகளுக்கு பயன்படுத்தக் கூடிய உயிர்காக்கும் மருந்துகளின் விலையைக் குறைக்க தேசிய மருந்துகள் விலை ஆணையம் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தேசிய மருந்துகள் விலை ஆணையம் , 51 வகையான உயிர்காக்கும் மருந்துகளின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. உயிர்காப்பதற்கான 36 வகையான மருந்துகளுக்கு அதிகபட்ச விலையை நிர்ணயித்துள்ள தேசிய மருந்துகள் விலை ஆணையம், 15 உயிர்காக்கும் மருந்துகளின் விலையை மாற்றி அமைத்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும், இதன் மூலம் உயிர்காக்கும் மருந்துகளின் விலை 6 முதல் 53 சதவீதம் வரை குறைய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் தேசிய மருந்துகள் விலை ஆணையத்தின் ‘பார்மா சாஹி தாம் என்ற ஆப்-ஐ பதிவிறக்கம் செய்து கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ளலாம் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.