18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் முடிவுக்கு எதிராக தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நீதிபதி மற்றும் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
18 எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். தகுதிநீக்கம் செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், தகுதி நீக்கம் செல்லாது என்று நீதிபதி சுந்தரும் உத்தரவிட்டனர்.
நீதிபதி சுந்தர், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குகளை விசாரித்து வரும்நிலையில் அவரது குடும்பத்தினர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசுக் குடியிருப்பில் தங்கியுள்ளனர். இந்நிலையில் சுந்தருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில் கடும் விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி எடுத்துரைத்தார். இதையடுத்து, நீதிபதி சுந்தருக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல, அவரது இல்லத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.