11 ஆண்டுகளுக்குப் பின் பிடிபட்ட சிலை கடத்தல் குற்றவாளி கைது

நெல்லை மாவட்டம், வள்ளியூர் அருகேயுள்ள பழவூர் கிராமத்தில் உள்ள நாறும்பூநாதர் கோவிலில் இருந்த நடராஜர் சிலை உள்ளிட்ட 13 ஐம்பொன் சிலைகள் கடந்த 2005-ஆம் ஆண்டு கொள்ளையடிக்கப்பட்டன. இதில் 4 சிலைகள் மட்டும், பிரபல சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் மூலம் மும்பை வழியாக லண்டனுக்கு கடத்தப்பட்டன.

 இதில், நடராஜர் சிலையின் கை லண்டனில் வைத்து அறுக்கப்பட்டுள்ளது. எனினும், அதற்குப் பதில் உலோக கை மீண்டும் பொருத்தப்பட்டது. போலீஸாரின் நெருக்கடியைத் தொடர்ந்து, லண்டனில் இருந்த 4 சிலைகளும் சட்டவிரோதமாக நேபாளம் வழியாக மீண்டும் தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்டன. தீனதயாளன் வீட்டில் சிலைக் கடத்தல் பிரிவு போலீஸார் நடத்திய சோதனையின்போது, இந்த 4 சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் சுபாஷ் கபூர், தீனதயாளன் உள்ளிட்ட 17 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டநிலையில், 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த திருநெல்வேலியைச் சேர்ந்த பரமதுரை என்பவரை சிலை கடத்தல் போலீஸார் சென்னையில் கைது செய்துள்ளனர். கும்பகோணம் கூடுதல் தலைமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *