கடந்த மார்ச் 1 முதல் தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தி வரும் போராட்டம் வித்தியாசமானதாக கருதப்படுகிறது. சங்கத்தின் உறுப்பினர்கள் இழப்பு என்று வருத்தப்பட்டாலும் அதை தாங்கி கொண்டு சங்க முடிவுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர்.
திரையரங்கு உரிமையாளர்களுடன் கூட்டுக் கூட்டத்தை நடத்தி சுமுகமான முடிவை எட்டுவதற்கு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் முன்னாள் தலைவர் கலைப்புலி தாணு ஈடுபட்டதன் விளைவாக நேற்று மாலை சென்னை பிலிம்சேம்பர் கூட்ட அரங்கில் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் செயலாளர் பன்னீர்செல்வம், உட்லண்ட்ஸ் வெங்கடேஷ், கணபதி ராம் ஜெயக்குமார், அபிராமி ராமனாதன் ஆகியோர் அடங்கிய குழுவுடன் சங்க தலைவர் விஷால், செயலாளர்கள் துரைராஜ், கதிரேசன், பொருளாளர் பிரபு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
தியேட்டரில் படங்களை திரையிட டிஜிட்டல் கட்டணம் தயாரிப்பாளர்கள் இனிமேல் செலுத்த மாட்டார்கள். ஆன்லைன் டிக்கட் புக்கிங் கட்டணம் குறைக்கப்பட வேண்டும், டிக்கட் விற்பனை தமிழகம் முழுவதும் கணினி மயமாக்கப்பட்டு வசூல் தகவல் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் என்கிற பிரதான கோரிக்கைகள் தயாரிப்பாளர்கள் சங்கம் தரப்பில் முன்வைக்கப்பட்டது. இந்த கோரிக்கைகள் எதற்கும் தியேட்டர் தரப்பில் ஒப்புதல் தரப்படவில்லை. சங்க கூட்டம் நடத்திதான் முடிவு சொல்ல முடியும் என தியேட்டர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதால் சுமுகமான முடிவு ஏற்படவில்லை. இக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட போது திருப்பூர் சுப்பிரமணியம் கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்ற நிபந்தனையை தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியதை திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஏற்றுக் கொண்டனர். திருப்பூர் சுப்பிரமணி நடிகர்களையும், தயாரிப்பாளர்களையும் தொடர்ந்து அவதூறாக பேசி வருவதும், ஆன்லைன் புக்கிங் கம்பெனிகள், டிஜிட்டல் நிறுவனங்களுக்கு ஆதரவாக பேசி வருவதால் தயாரிப்பாளர்கள் சங்கம் இம்முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.