வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது, ஊதியத்தில் பிடித்தம் செய்யக்கூடாது என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட ஜாக்டோ – ஜியோ அமைப்பின் போராட்டம் தொடர்பான வழக்கில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேற்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, ஜாக்டோ – ஜியோ அமைப்பின் தரப்பில், ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட 3 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதில், 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்த சாத்தியங்களை ஆராய தமிழக அரசு 2016-ம் ஆண்டு அமைத்த நிபுணர் குழு, வரும் 30-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக கிரிஜா வைத்தியநாதன் கூறினார். அதேபோல பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து 2006-ம் ஆண்டு தமிழக அரசு அமைத்த நிபுணர் குழு, வரும் டிசம்பர் மாதம் அறிக்கை தாக்கல் செய்யும் என்றும் அந்த அறிக்கைகள் வந்த பின்னரே, கோரிக்கைகள் குறித்து தமிழக அரசுடன் ஆலோசித்து முடிவெடுக்க முடியும் என்றும் கிரிஜா வைத்தியநாதன் விளக்கமளித்தார்.

பிற்பகலில் நடந்த விசாரணையின்போது, 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தும் தேதி குறித்து அக்டோபர் 13-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். தாமதம் ஏற்பட்டால் இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கே.கே. சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் உத்தரவிட்டனர். மேலும், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது மறு உத்தரவு வரும் வரை எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது எனவும், வேலைநிறுத்த காலத்திற்கான ஊதியத்தை பிடித்தம் செய்யக்கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை அக்டோபர் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *