வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் கிடையாது ; தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிவிப்பு….

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலைநிறுத்த நாட்களுக்கு சம்பளம் பிடித்தம் இல்லை என தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் உள்பட 4 அம்ச கோரிக்கைகளை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வந்தனர். கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றக் கோரி கடந்த 7-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். போராட்டத்தால், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதால், போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும், போராட்டத்தை வாபஸ் பெற்று உடனடியாக வேலைக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர். அதைத் தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலைநிறுத்த நாட்களுக்கு சம்பளம் பிடித்தம் இல்லை என தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார். சம்பளப்பட்டியல் ஏற்கனவே தயார் செய்திருந்தால் துணைப் பட்டியல் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *