புவனேஸ்வர் : வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள தயே புயல் ஒடிசாவின் வடக்கு நோக்கி நகர்ந்து குறைந்த காற்றழுத்தமாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தயே புயல் காரணமாக ஒடிசாவின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பல பகுதிகள் நீரில் மிதக்கின்றன. மல்கன்கிரி மாவட்டம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 12 மணி நேரத்தில் புயல் சின்னம் வலுவிழக்கும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே பெய்த தொடர் மழையால், பல பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலப் அணையில் தொடர்ந்து நீர்மட்டம் அதிகரித்து வருவதால், 2 மதகுகள் திறக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.