“லட்சுமணன் நம்ம சாம்பியன்தான்” – பெருமைப்பட்ட மத்திய அமைச்சர்

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்றும் தவறு காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட தமிழக வீரரை விளையாட்டுத்துறை அமைச்சர் வெகுவாக பாராட்டியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 8 தங்கம் உள்பட 69 பதக்கங்களை வென்று சாதனை படைத்தது. ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் லட்சுமணன் 29 நிமிடம் 44.91 விநாடிகளில் ஓடி மூன்றாவது இடத்தை பிடித்தார். புதுக்கோட்டையை சேர்ந்த லட்சுமணனுக்கு வெண்கலப் பதக்கம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அவரின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. போட்டியின்போது ஆடுகளத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட பாதையை விட்டு சற்று விலகி ஓடியதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து போட்டியில் 4-வது இடம் பிடித்த சீன வீரருக்கு வெண்கலப் பதக்கம் அறிவிக்கப்பட்டது. ஓடுகளப் பாதையில் அவர் செய்த சிறிய தவறு அவரின் பதக்கம் கைவிட்டு போக காரணமாக அமைந்தது.

இந்நிலையில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் லட்சுமணனை அழைத்து பாராட்டியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ஆசிய விளையாட்டு போட்டி 10,000 மீ ஓட்டப் பந்தயத்தில் கோவிந்தன் லட்சுமணன் பதக்கம் வென்றார். ஆனால் சிறிய தவறு காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் நம்முடைய சாம்பியன். நாம், நம்முடைய சாம்பியன் பக்கம் நிற்க வேண்டும். அவரை சந்தித்து வாழ்த்திய இந்தத் தருணத்தை பெருமையாக கருதுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *