நமது வாழிடத்தையும் அதன் சுற்றுச்சூழலையும் தூய்மையாக வைத்துக்கொள்வதே- நம் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வழியாகும். ஆனால், தமிழகத்தின் தலைநகரான சென்னை பெருநகரத்தின் சுற்றுச்சூழலுக்கான பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியாக உள்ளது.
சற்றொப்ப ஐம்பது இலட்சத்திற்கும் மேலான மக்கள் வசிக்கும் சென்னை பெருநகரத்தில் மேலும் பல லட்சம் பேர் நாள்தோறும் வந்து செல்லும் மாபெரும் நகரமாகவும் விளங்குகிறது. இதனால் சென்னையின் சுற்றுச்சூழல் குப்பைக் கூளங்களால் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, ஏராளமான குடிசைப்பகுதிகளில் பெரும்பாலும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றமடிக்கும் நிலை உள்ளது. போதிய கழிப்பறை வசதியில்லாததால் வெளியிடங்கள் மனிதக்கழிவுகளால் அசுத்தமாகி கிடக்கும் நிலையும் உள்ளது.
இந்நிலையில், ரேடியோ சிட்டி91.1 பண்பலை வானொலி நிர்வாகமும் திரு. நிர்மல் அவர்களின் எக்ஸ்னோரா அமைப்பும் இணைந்து தொடர்ச்சியாக 100 மணி நேரம் சென்னையைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பதை அறிந்து பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். உலகச் சாதனை (கின்னஸ்) படைக்கும் வகையிலும் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ள இரு அமைப்புகளையும் நெஞ்சாரப் பாராட்டி வாழ்த்துகிறேன்.