ரஜினியின் ஆதரவு இருக்கும் என நம்புகிறேன் – கமல்ஹாசன்

ஆதரவு என்பது கேட்டு பெறவேண்டிய விஷயம் அல்ல. அவர்களே கொடுக்கவேண்டும். இப்போது வரை தனித்து போட்டியிடுவதே மக்கள் நீதி மய்யம் கட்சியின் முடிவாக உள்ளது”

ரஜினியின் ஆதரவு தமக்கு இருக்கும் என நம்புவதாகவும், ஆனால் ஆதரவு கேட்டு பெறவேண்டிய விஷயமல்ல என்றும் அவர்களே கொடுக்க வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் கடந்தாண்டு பிப்ரவரி 21-ம் தேதி மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தொடங்கினார். அதன்பிறகு தொடர்ச்சியாக அரசியல் பணிகளில் ஈடுபட்டு வரும் அவர், தற்போது நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்தது. ஆனால் கமல் ஏதும் பதில் கூறவில்லை. மக்களவைத் தேர்தல் குறித்து பேசிய கமல்ஹாசன், எங்கள் கைகள் கரை படிந்து விடக்கூடாது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப்போட்டியிடும் என்று தெரிவித்தார்.

இதற்கிடையே வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் தமிழக சட்டமன்றத் தேர்தல் தான் தங்களது இலக்கு என்றும் ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் பேசிய கமல்ஹாசன், ரஜினியின் ஆதரவு தமக்கு இருக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், 3ஆம் அணி உருவாகும் என நான் சொல்லவில்லை. எங்களோடு இணையவே அழைப்பு விடுத்துள்ளோம். ரஜினியின் ஆதரவு எனக்கு இருக்கும் என நம்புகிறேன், ஆனால் ஆதரவு என்பது கேட்டு பெறவேண்டிய விஷயம் அல்ல. அவர்களே கொடுக்கவேண்டும். இப்போது வரை தனித்து போட்டியிடுவதே மக்கள் நீதி மய்யம் கட்சியின் முடிவாக உள்ளது.

 

எங்கள் பலம் மக்கள் தான், யாரோடு சேர்ந்தால் பணம் வரும் என்று நாங்கள் யோசிக்கவில்லை. கஜா புயல் பாதிப்பின் போது பிரதமர் ஏன் தமிழகம் வரவில்லை என கேட்பது நமது உரிமை. தற்போது அவர் தமிழகம் வந்துதான் ஆகவேண்டும். தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதி என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *