மு.க. ஸ்டாலினும், டிடிவி தினகரனும் கூட்டுச் சதி செய்வதாக குற்றம்சாட்டிய அமைச்சர் ஜெயக்குமார், சபாநாயகருக்கு உண்டான அதிகாரத்தின்படி, 18 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்

அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து சசிகலாவை நீக்கி, அக்கட்சி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்க முடியாது என தினகரன் உறுதிப்பட தெரிவித்துள்ளார். இதையடுத்து, பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் தினகரன் அணியினர் கடந்த வாரம் மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், தேர்தல் ஆணையரை சந்தித்து பேசுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி. உதயகுமார் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும், அதிமுக பொதுக்குழு தீர்மானம் குறித்தும் தேர்தல் ஆணையரிடம் முறையிட முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, சபாநாயகருக்கு சில அதிகாரங்கள் இருப்பதாகவும், ஜனநாயக முறைப்படி சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளதால் அதில் யாரும் தலையிட முடியாது என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *