ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையின் போது, தாம் வாங்கிக் கொடுத்த இரண்டு பேட்டரிகள் எதற்காக பயன்படப் போகிறது என்று தமக்குத் தெரியாது என பேரறிவாளன் கூறியதாகவும், ஆனால் அவரது வாக்குமூலத்தில் இருந்து அந்த பகுதியை தாம் நீக்கிவிட்டதாகவும் விசாரணை அதிகாரி தியாகராஜன் தெரிவித்தார். தியாகராஜனின் இந்த கருத்தை சுட்டிக்காட்டி தன்னை சிறையில் இருந்து விடுதலை செய்யுமாறு, உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தற்போதைய சூழலில் பேரறிவாளனை விடுதலை செய்யவோ, அவரது தண்டனையை குறைக்கவோ முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், ராஜீவ்காந்தி கொலை வழக்கை சி.பி.ஐ. மற்றும் பல்நோக்கு விசாரணைக்குழு மீண்டும் முதலில் இருந்து விசாரிக்கலாமா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து மத்திய அரசு 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.
2017-12-13