முதலமைச்சர் பழனிச்சாமி அரசின் அவைத் தலைவராக ஆளுநர் வித்யாசாகர் ராவ் செயல்படுவதாக, டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு முழுவிலக்கு அளிக்க வலியுறுத்தி திருச்சி உழவர் சந்தை மைதானத்தில், அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவிதினகரன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், தமிழக அரசு தவறான வாக்குறுதிகளை அளித்து, மாணவி அனிதாவின் உயிரை பறித்துவிட்டதாக புகார் தெரிவித்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நீட் தேர்வை கடுமையாக எதிர்த்தார் என குறிப்பிட்ட தினகரன், அவசர சட்டம் மூலம் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு, மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், ஆளுநர் வித்யாசாகர் ராவின் செயல்பாட்டில் சந்தேகம் எழுவதாக கூறிய டிடிவி தினகரன், முதலமைச்சர் பழனிசாமி அரசின் அவைத் தலைவராக, ஆளுநர் வித்யாசாகர் ராவ் செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டினார். அதிமுகவை துரோகிகளிட்ம் இருந்து காப்பாற்ற போராடி வருகிறோம் என்றும், எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு செல்லும் காலம் வந்துவிட்டது என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.