டி.டி.வி.தினகரன் விரைவில் சிறைக்கு செல்வது உறுதி என பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை அடுத்த வாரம் வீட்டுக்கு அனுப்புவோம் என ஆவேசமாக கூறினார்.
சென்னையில் உள்ள தங்கசாலையில் அரசு சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதலமைச்சர், ஆட்சியையும் கட்சியையும் கைப்பற்ற ஒரு சிலர் திட்டமிட்டு வருகின்றனர் என்றும் அ.தி.மு.கவையும் ஆட்சியையும் கைப்பற்ற வேண்டும் என்று முயற்சித்த தினகரன் குடும்பத்தினருக்கு அனைத்து கதவுகளும் மூடப்பட்டு விட்டன என்றும் தெரிவித்தார். மேலும், முதலமைச்சரை வீட்டுக்கு அனுப்புவோம் என தெரிவித்த டிடிவி தினகரனுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்தார். தினகரன் விரைவில் மாமியார் வீட்டுக்கு தான் செல்வார் என முதலமைச்சர் ஆவேசமாக கூறினார்.
காஞ்சிபுரம் ஸ்ரீரடியில் நடந்த பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஆட்சியை கலைத்துவிட வேண்டும் என மு.க.ஸ்டாலின் எந்த முயற்சி செய்தாலும் ஆட்சிக்கு வரவே முடியாது என்றும் தற்போது தமிழகத்தில் வலுவான ஆட்சி நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தார்.
திருவாரூரில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் காமராஜ், கருணாநிதியே மு.க.ஸ்டாலினை நம்பவில்லை என்றும் டிடிவி தினகரனை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறினார்.
இதேபோல், திருவள்ளூரில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் பென்ஜமின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் திமுக கொல்லைப்புறமாக வந்தாலும் ஆட்சியை பிடிக்க முடியாது என தெரிவித்தார்.