கூட்டாட்சி தத்துவத்தை தகர்க்க வேண்டும் என்ற முயற்சியிலும், மாநிலங்களைப் பலவீனப்படுத்தும் வேலையிலும் ஆர்.எஸ்.எஸ். ஈடுபட்டுள்ளது என கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநில சுயாட்சி மாநாடு நடைபெற்றது. இதில், கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், மாநில உரிமைகள் தொடர்பான பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் கிராம சுயராஜ்யத்துக்காக சுதந்திரப் போராட்ட காலத்திலேயே காந்தி குரல் கொடுத்தார் என்றும் தெரிவித்தார். மேலும், கூட்டாட்சி தத்துவத்தை தகர்க்க வேண்டும் என்ற முயற்சியிலும், மாநிலங்களைப் பலவீனப்படுத்தும் வேலையிலும் ஆர்.எஸ்.எஸ். ஈடுபட்டுள்ளது என்று குற்றம்சாட்டினார்.
பின்னர் பேசிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மாநிலத்திற்கு மாநிலம் பாரபட்சத்தோடு செயல்படும் மத்திய அரசு தூக்கி எறியப்பட வேண்டும் என்றும் தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில், ஜனநாயகத்தின் ஒரே நம்பிக்கை நீதிமன்றம்தான் என்றும் தெரிவித்தார்.