மருத்துவக் காப்பீடு பெற ஆதார் கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு

ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மருத்துவக் காப்பீடு பெற ஆதார் கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தாண்டின் மத்திய பட்ஜெட் கடந்த ஜனவரி மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் முக்கிய அம்சமாக அறிவிக்கப்பட்ட மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டம் அக்டோபர் 2-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தால், நாடு முழுவதும் 50 கோடிக்கும் அதிகமான ஏழை, நடுத்தர குடும்பங்கள் பயன்பெறுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது.  இந்நிலையில், மத்திய அரசின் இந்த புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெற பயனாளிகளுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆதாரில் பயனாளிகளின் உண்மையான விவரங்கள் இருக்கும் என்பதால், வருமானத்தை குறைத்து கொண்டு யாரும் இந்த திட்டத்தின் மூலமாக பயன்பெறக்கூடாது என்பதற்காக இந்த உத்தரவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.

மேலும் பயனாளிகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வரை செலவிடப்படும் என்பதால் பல ஆயிரம் கோடி ரூபாய் இந்த திட்டத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், இதில் அதிகாரிகள் எந்தவிதமான முறைகேட்டிலும் ஈடுபடக்கூடாது என்பதற்காகவும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

பல கோடி மக்கள் வசிக்க வீடு இல்லாமல் சாலைகளில் வசித்து வரும் நிலையில், அவர்களுக்கு ஆதார்  அட்டை எவ்வாறு கிடைக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *