மத்திய அரசுக்கு அடங்கிப்போகும் நிலையில் தமிழக அரசு இல்லை; நாமக்கல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

மத்திய அரசுக்கு தாங்கள் அடிமை இல்லை என்றும், அதிமுக என்ற இரும்பு கோட்டையை யாராலும் அசைக்க முடியாது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் கருப்பட்டிபாளையத்தில், தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாமக்கல் நகராட்சி பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவச் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவில் கலந்து கொள்ள நாமக்கல் செல்லும் வழியில் மல்லூரில் முதலமைச்சருக்கு பள்ளி மாணவ, மாணவிகள் மலர்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். கருப்பட்டிபாளையத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி அமைக்கப்பட்ட காய்கறி மற்றும் பழக்கண்காட்சியில், எம்.ஜி.ஆர். அவர்களின் உருவம் பொறிக்கப்பட்ட பழங்களை முதலமைச்சர் பார்வையிட்டார். இந்த நிகழ்வின் போது, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதையடுத்து நடைபெற்ற விழாவில், எம்.ஜி.ஆரின் உருவப்படத்தை திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு அரசு துறைகளைச் சேர்ந்த முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அரசு மிகச்சிறப்பாக செயல்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார். மத்திய அரசுக்கு தாங்கள் அடிமை இல்லை என்றும், அதிமுக என்ற இரும்பு கோட்டையை யாராலும் அசைக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாகவும், அப்படி செயல்பட்டால்தான் தமிழக அரசின் திட்டங்களுக்கு நிதியுதவி கிடைக்கும் என்றும் முதலமைச்சர் கூறினார்.

இதைத்தொடர்ந்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் கட்சியை கொண்டு செல்ல முயன்றவர்களின் ஆட்டம் முடிவுக்கு வந்ததாக கூறினார்.

இவ்விழாவில், தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால், மக்களவை துணைத்தலைவர் மு.தம்பிதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *