சென்னை போரூர் அருகே பிறந்து சில தினங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை சாலையோரம் வீசிச் சென்ற இளம்பெண்ணை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலிசார் கைது செய்துள்ளனர்.
சென்னை போரூரை அடுத்த காரம்பாக்கம் மயானம் அருகே கடந்த 10ஆம் தேதி சாலையோரம் உள்ள கால்வாய் அருகே குழந்தை ஒன்றின் அழுகுரல் கேட்டது. இதையடுத்து அருகிலிருந்தோர் பெண் குழந்தையை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தார்.
முதலுதவிக்கு பின்னர் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது, நள்ளிரவில் ஆண் துணையுடன் கையில் பையோடு வந்த இளம்பெண் ஒருவர், குழந்தையை விட்டுச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.
இதையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த லாவண்யா என்ற பெண்ணைக் கைது செய்தனர். லாவண்யாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே லாவண்யாவின் தாய் இறந்ததால், திருமணம் நின்றது. ஆனாலும் திருமணம் நிச்சயிக்கப்பட்டவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் லாவண்யா கர்ப்பம் அடைந்து குழந்தை பெற்றுள்ளார். தொடர்ந்து குழந்தையை கவனிக்க முடியாததால் சாலையோரம் வீசி சென்தாக லாவண்யா கூறியுள்ளார். இதையடுத்து இளம் பெண், மயிலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.