ஒசூர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் புதிய வைரஸ் நோயால் காய்கறிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. இதனால் காய்கறிகள் முழுமையான வளர்ச்சியை அடையவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஒசூர் அருகேயுள்ள சாரகப்பள்ளி கிராமத்தில் அதிக அளவில் விவசாயிகள் பசுமைக்குடில்கள் அமைத்து விவசாயம் செய்து வருகின்றனர். குடை மிளகாய், பஜ்ஜி மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளையும், ரோஜா, ஜெர்பரா போன்ற மலர் வகைகளையும் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில மாதங்களாக இங்கு பயிரிட்டுள்ள பஜ்ஜி மிளகாய், குடை மிளகாய் காய்கறி பயிர்களை ஒருவித வைரஸ் நோய் தாக்கி வருகிறது.
இந்த நோய் தாக்கத்தால் செடியின் இலைகள், தண்டுகள் நோய் தாக்கப்பட்டு பின்னர் அடுத்தபடியாக காய்களில் நோய் தாக்குவதால் அவை முழுவளர்ச்சி அடையாமல் முதிர்ச்சி அடைந்து விடுகின்றன. இதனால் விளைச்சல் குறைந்து உற்பத்தி கடுமையாக பாதிப்படைகிறது என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
மிளகாயைத் தொடர்ந்து இந்த வைரஸ் நோய் தக்காளி உள்ளிட்ட பயிர்களிலும் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகிறது. பல லட்சம் ரூபாய் செலவு செய்து விவசாயம் செய்த விவசாயிகள் நல்ல லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் இதுபோன்ற வைரஸ் நோய் தாக்கம் விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
எனவே தமிழக அரசின் வேளாண்துறை மற்றும் தோட்டகலைத்துறை அதிகாரிகள் இந்த வைரஸ் நோயை கண்டறிந்து அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.