மேட்டூர் அணையின் நீர்மட்டம் 85 அடியை தாண்டியுள்ளது. கபினி உள்ளிட்ட கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணையின் நீர்இருப்பு 45 டிஎம்சி-க்கு மேல் உள்ளது. குடிநீருக்காக அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1000 கனஅடியாக உள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து, மேட்டூர் அணையின் நீர் இருப்பு அதிகரித்துள்ளதால், டெல்டா பாசனத்திற்கு நீர் திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
இந்நிலையில் டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து விரைவில் நீர் திறக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி புதிய தலைமுறையிடம் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், சென்னை திரும்புவதற்காக மதுரை விமான நிலையம் வந்தார் முதலமைச்சர். அப்போது, மேட்டூர் அணையிலிருந்து விரைவில் நீர் திறக்கப்படும் என்ற தகவலை புதிய தலைமுறை செய்தியாளரிடம் முதலமைச்சர் தெரிவித்தார்.