தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரும் விளக்க அறிக்கையில் பொய் தகவல் கூறியதால் தகுதி நீக்கம் செய்யப்ட்டுள்ளனர் என சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தகுதிநீக்கம் குறித்து சபாநாயகர் தனபால் விளக்கம் அளித்துள்ளார். அதில், அதிமுக ஆட்சியை கவிழ்க்க ஒரு கருவியாக தாம் பயன்படுத்தப்பட்டதாக விளக்கத்தின்போது, ஜக்கையன் கூறியதாகவும், அவரது விளக்கத்தை ஏற்று அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 18 எம்எல்ஏக்களும் புதுச்சேரியில் தங்கிவிட்டு கட்சி, நண்பர்களின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம் எனக் கூறியதாகவும், ஓ. பன்னீர்செல்வம், மாஃபா பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவி தந்தது பிடிக்காததாலேயே 18 பேரும் பொய் குற்றச்சாட்டை முன்வைத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சசிகலா, தினகரனுக்கு ஆதரவாக இருப்பதைக் காட்டவே 18 பேரும் ஊடகங்களில் தவறான தகவல் பரப்பியதாகவும், அத்துடன் முதலமைச்சர் ஊழல் புதிந்ததாகவும், பாரபட்சம் காட்டுவதாகவும் 18 பேரும் குற்றம் சாட்டியிருந்தனர். இதுபோன்று பல பொய் தகவல்களை விளக்க அறிக்கையில் கூறியதால் தான், 18 எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக தனபால் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மும்பையிலிருந்து நேற்று டெல்லி சென்ற ஆளுநர் வித்யாசாகர் ராவ், அங்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, ஆளுநர் இன்று சென்னை திரும்புகிறார். சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்படுவதால், பரபரப்பு நிலவுகிறது.