மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையம் அருகே மர்ம பொருள் வெடித்ததாக செய்தி வெளியிட்ட செய்தியாளர்கள் மீது, காவல்துறையினர் பிணையில் வரமுடியாதபடி வழக்குப்பதிவு செய்தனர். இதனை கண்டித்து நெல்லை, மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர். பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கத்தினர் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பத்திரிகையாளர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெறவேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதேபோன்று, சென்னையில் டிஜிபி அலுவலகம் முன்பு பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். வழக்குப்பதிவு செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என அவர் உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.