கனமழை எதிரொலியால், நீலகிரி மாவட்டத்திற்கு யாரும் சுற்றுலா வர வேண்டாம் என்றும், மலை ரயில் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டாலும், மலைகளின் அரசியான உதகையை தாங்கி நிற்கும் நீலகிரி மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களாக பரவலாக, மிதமானது முதல் கனமழை வரை பதிவாகி வருகிறது.
மழைச்சேதம், நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்களால் பாதிப்பு ஏற்பட்டால் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. நிலச்சரிவு அபாயம் உள்ள 233 பகுதிகள் கண்டறியப்பட்டு, அவற்றை கண்காணிக்க வருவாய் அலுவலர்கள் தலைமையில், 35 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
கனமழை காரணமாக, தமிழ்நாட்டில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்தும், நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் என, மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சந்திரகாந்த் காம்ளேவும், ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவும் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து 210 சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்ட மலைரயில், திடீரென ஏற்பட்ட எஞ்சின் கோளாறு காரணமாக, ஆடர்லி ரயில் நிலையத்தை கடந்து நடுகாட்டில் செங்குத்தான பகுதியில் சென்றுக்கொண்டிருந்தபோது நின்றது…
இதனால், 6 மணி நேரம், சுற்றுலா பயணிகள் செய்வதறியாது தவித்தனர்… இதனைத் தொடர்ந்து, மாற்று ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு, நடுக்காட்டில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்…..
நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக உதகை, மேட்டுப்பாளையம், குன்னூர் செல்லும் அணைத்து ரெயில் சேவைகளும், 3 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரெயில்வே அறிவித்திருக்கிறது….